சுயதொழில் – ஹேர் ஆயில்(மூலிகை எண்ணெய்) தயாரிப்பு தொழில் !!!

0
1099

தயாரிப்பு தொழில் – கூந்தல் வளர்ச்சிக்காக இப்போது அனைவருமே மூலிகை எண்ணெய் பயன்படுத்த ஆரமித்துள்ளனர்.

அதாவது பெண்களை பொறுத்தவரை முடி உதிர்வதை தடுக்கவும், முடி நல்ல அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர்ப்பதற்காக இந்த மூலிகை எண்ணெய்யை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.

ஆண்களை பொறுத்தவரை முடி உதிர்வு, சொட்டை மற்றும் வழுக்கை விழாமல் இருப்பதற்காக இந்த மூலிகை எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர்.

இந்த தொழிலில் போட்டிகள் அதிகம் இருந்தாலும் தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் இந்த தயாரிப்பு தொழில் மூலம் நல்ல லாபம் பார்க்கலாம்.

தயாரிப்பு தொழில் – மூலிகை எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. தேங்காய் எண்ணெய்
  2. வெந்தயம்
  3. சீரகம்
  4. கஸ்தூரி மஞ்சள்
  5. பூலாங்கிழங்கு
  6. வெட்டிவேர்
  7. விளாமிச்சை வேர்
  8. கருவேப்பிலை
  9. பொன்னாங்கண்ணி
  10. கீழாநெல்லி வேர்
  11. திருநீற்று பச்சிலை (துன்னித்திப் பச்சிலை)
  12. கரிசலாங்கண்ணி
  13. சோற்று பச்சிலை
  14. நெல்லி
  15. சோற்று கற்றாழை

கட்டிட அமைப்பு:

மூலிகை எண்ணெய்யை காய்ச்சுவதற்கு அடுப்பு, தயாரித்த மூலிகை எண்ணெய்யை பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்து வைக்க ஒரு அறை, பச்சிலைகளை வளர்க்க 10-க்கு, 10 அடி நீளம், அகலம் உள்ள காலி இடம்.

அதேபோல் மூலிகை பொருட்களை காய வைக்க திறந்த வெளியிடம் தேவை.

இதர பொருட்கள்:

ஆட்டு உரல் (அ) கிரைண்டர், மூலிகை எண்ணெய்யை காய்ச்ச ஒரு இரும்பு சட்டி, காய்ச்சிய தைலத்தை ஊற்றி வைக்க காலி டின்கள், பல்வேறு கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள், லேபிள்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலிகைகள், பச்சிலைகள்.

இதர பொருட்கள் கிடைக்கும் இடங்கள்:

காலி டின்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளிலும், மூலிகை மற்றும் பச்சிலை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கிராமப்புறங்கள் மற்றும் மலைபகுதிகளில் இருந்தும் மூலிகை, பச்சிலைகளை பெறலாம்.

தயாரிப்பு தொழில் – மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை:

தலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின்பு தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர், கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும்.

50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும்.

அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்க வேண்டும்.

உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும்.

இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும்.அவை எண்ணெயில் வெந்து உதிரும்.

இந்த சாறு முழுவதும் எண்ணெயில் இறங்கி கலந்து விடும்.

எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறியவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி தகர டின்னில் ஊற்றினால் ஹேர் ஆயில் தயார்.

எண்ணெயை தேவையான அளவுள்ள பாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கலாம்.

தயாரிப்பு தொழில் – பக்குவம் மிகவும் முக்கியம்:

கொதிக்கும் எண்ணெயில் வடைபோல் போட்டு அவற்றை முறுகும் வரை வேக வைத்து விட்டால், வடையின் துகள்களே எண்ணெயை உறிஞ்சி கொள்ளும். எண்ணெய் அளவு குறைந்து விடும்.

முறுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே தீயை அணைத்து விட்டால் முழுமையான மூலிகை எண்ணெயாக மாறாது.

எண்ணெய் முழுவதும் மூலிகை எண்ணெயாக மாறிவிட்டதை அறிய, வடை வெந்து கொண்டிருக்கும் போது, ஒரு திரியை சட்டியில் உள்ள எண்ணெயில் நனைத்து பற்ற வைக்க வேண்டும்.

எண்ணெய் ஈரப்பதமாக இருந்தால் சடசடவென சத்தம் வரும். சரியாக எரியாது. திரி சத்தமில்லாமல் எரிந்தால் மூலிகை எண்ணெய் பக்குவத்திற்கு வந்து விட்டது என்பதை அறிந்து உடனே தீயை அணைத்து விடலாம்.

தயாரிப்பு தொழில் – சந்தை வாய்ப்பு:

டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள், கூட்டுறவு கடைகள் ஆகியவற்றில் ஹேர் ஆயில் விற்கப்படுவதால் அங்கு சப்ளை செய்யலாம்.

தெரிந்தவர்கள், அருகில் இருப்பவர்களிடம் நாமே நேரடியாக விற்கலாம். நல்ல தரத்தோடு தயாரிக்கும் போது பலன் நன்றாக தெரியும்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here